இனி போயஸ் கார்டனா? அறிவாலயமா? குழப்பத்தில் வடிவேலு!

சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் வடிவேலு வீட்டில் கல் வீசப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி கடுமையாக தாக்கினார். வடிவேலுவின் காமெடியான பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

வந்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்த வடிவேலு, தனது பேச்சில் மேலும் மேலும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார்.

தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர் அளித்த பேட்டியில் கூட, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாகவும், திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

இப்போது திமுக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ... வடிவேலுவை நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கிய புள்ளிகள். சக நடிகர் என்று கூட பாராமல் ஏக வசனத்தில் பேசி விஜயகாந்தை விமர்சித்ததால் சில சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கும் வடிவேலுவின் கதி இனி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ‌

அதிமுக ஆட்சியை பிடிக்கும் நிலைமையை நெருங்கியதுமே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு முன் கல் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திரண்ட தேமுதிகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தேர்தல் முடிவைத் தொடர்ந்து வடிவேலுவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? என்ற ‌கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று போயஸ் கார்டன் சென்று சமாதானம் ஆவது; இன்னொன்று திமுகவிலேயே ஐக்கியமாவது. இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் வடிவேலு எடுக்கக் கூடும் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.


இதற்கிடையில் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வடிவேலு, அழகிரியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம் வடிவேலுவின் வீட்டுக்கு விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாப்புக்கு வெச்சிட்டாங்களே ஆப்பு!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...