பவர் (இழந்த) ஸ்டாரும்; வேஷம் கலைந்த சினிமாவும்

தமிழ் சினிமாவை காப்பாற்ற அவ்வப்போது சில அவதாரங்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் வரிசையில் வந்தவர்தான் அக்குபன்ஞ்சர் டாக்டர் சீனிவாசன்.

அண்ணா நகரில் சிறிய அளவில் அக்குபன்ஞ்சர் மருத்துவமனை வைத்திருக்கும் அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். நீதானா அவன், உனக்காக ஒரு கவிதை, ரா ரா பழனிச்சாமி, மண்டபம், சுரங்க பாதை, இப்படி சில படங்களில் நடித்தார்.

புதிய இயக்குனர்கள் அவரை தேடிப்தேடிப்போய் வாய்ப்பு கொடுத்ததற்கு காரணம் அந்த இயக்குனர்களுக்கு அவர் கொடுக்கும் கட்டிங் பணம். சிறிய சம்பளத்தில் படம் இயக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு இது ஒரு உபரி வருமானமாக இருந்தால் அவரை ஆர்வத்தோடு தங்கள் படத்தில் தலைகாட்ட வைத்தனர்.

திடீரென ஒருநாள் அவருக்கும் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. அந்த ஆசையை சரியாக பயன்படுத்திக் கொண்டார் சண்டை இயக்குனர் பன்ஞ் பரத். சினிமா இயக்கம் பற்றி அரிச்சுவடிகூட தெரியாத அவர் எடுத்த படம்தான் இந்திரசேனா. இதில் சீனிவாசன் வில்லனாக நடித்தார். அடுத்து ஒருவர் இயக்கத்தில் லத்திகா என்ற படத்தை தயாரித்தார்.

இதில் இயக்குனருக்கும், இவருக்கும் பண விஷயத்தில் முட்டல் மோதல் வர முடிந்த படத்துக்கு இவரே கதை, திரைக்கதை வசனம், இயக்குனர் ஆனார். ஹீரோவும் அவர்தான். அவருக்கு ஜோடியாக மீனாட்சி கைலாஷ் என்ற பெண் துணிச்சலுடன் நடித்தார்.

பெரியார், அண்ணா எம்.ஜி.ஆருக்கு பிறகு இவர்தான் அடுத்த தலைவர் என்கிற ரேன்ஞ்சுக்கு ஓப்பன் சாங்குடன் மிரட்டியது அந்தப் படம். 50 வயதான அக்குபன்ஞ்சர் சீனிவாசனின் ஹீரோ கனவு நிறைவேறியது.

ஒரு அக்கு பன்ஞ்சர் டாக்டரால் எப்படி கோடிக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்க முடிகிறது என்று எந்த சினிமா கலைஞனும் யோசிக்கவில்லை. பலர் அவரின் அண்ணா நகர் கிளினிக்கிற்கு தேடிச் சென்று, காத்திருந்து அவரது நண்பர்கள் ஆனார்கள்.

அதில் சில முக்கிய நடிகைகளும் உண்டு. கையில் கதையை வைத்துக் கொண்டு வாய்ப்பு தேடிச் செல்லும் புதிய இயக்குனர்கள் தங்கள் கனவு கதையை ஒதுக்கி வைத்து விட்டு சீனிவாசனுக்கு கதை எழுதிக் கொண்டு சென்று அவரைப் பார்த்தார்கள்.

அப்படி தேடிச் சென்று கதை சொல்பவர்களுக்கு ஒரு நண்மை உண்டு. சீனிவாசனுக்கு கதை பிடிக்காவிட்டாலும் பெரும் தொகை சன்மானமாக கிடைக்கும். இதற்காக வாரம் ஒரு கதை சொன்ன இயக்குனர்களும் உண்டு.

அப்படிச் சென்றவர்கள் ஆளாளுக்கு ஒரு பட்டத்தை சீனிவாசனுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். அதில் அவருக்க பிடித்த பவர் ஸ்டார் பட்டத்தை பணிவுடன் ஏற்றுக் கொண்டார். (தெலுங்கில் பவன் கல்யாணின் பட்டம் அது) லத்திகாக படம் எல்லா தியேட்டர்களிலும் ஒரு காட்சி ஓடிவிட்டு பத்திரமாக திரும்பி வந்தது.

ஆனாலும் விடுவாரா பவர் ஸ்டார், சென்னை கமலா தியேட்டரில் அந்தப் படத்தை திரையிட்டு 150 நாட்கள் ஓட்டினார். அதாவது அந்தப் படம காலைக் காட்சியாக ஓடும். பல நாட்கள் வெறும் தியேட்டரில் படம் ஒடும். சில நாள் படம் பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாணி வழங்கப்படும், அனைத்து நாளும் இலவச அனுமதிதான்.

தியேட்டரின் வாசலில் தனது ஆளுயர கட்அவுட் வைப்பதற்கும், படம் திரையிடுவதற்கும் வாடகை கொடுத்து விடுவார். விஜய், அஜீத் படங்களே கமலா தியேட்டரில் சில நாட்களில் காணாமல் போகும் நிலையில் பவர் ஸ்டார் மட்டும் நிலைத்து நின்று சிரித்துக் கொண்டிருந்தார். இதில் இன்னொரு கொடுமை என்ன வென்றால் சில பத்திரிகைகள் லத்திகா படத்தை ஆண்டு கண்ணோட்டத்தில் அதிக நாள் ஓடிய படங்களின் பட்டியலில் சேர்த்து மகிழ்ந்துது.

தன் வழுக்கை தலைவில் விதவிதமான விக் வைத்துக் கொண்டு அவர் கொடுத்த போஸ்கள் கோடம்பாக்க ரோடுகளில் விதவிதமாக சிரித்துக் கொண்டிருந்தன. அடுத்து திருமா, தேசிய நெடுஞ்சாலை என்ற இரண்டு படத்தை தானே தயாரித்து இயக்கப்போவதாக அறிவித்தார்.

அதில் ஒரு படத்தில் மாஜி ஹீரோயின் வாணி விஸ்வநாத் அவருக்கு ஹீரோயின். பவர் ஸ்டாரின் "அன்பான" உபசரிப்பின் காரணமாக சில மீடியாக்களும் பவர் ஸ்டாரை தூக்கி வைத்துக் கொண்டாடியது. சில முன்னணி வார இதழ்கள்கூட அவரை கிண்டல் செய்வதாக காட்டிக் கொண்டு அவருக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியை அள்ளி வீசியது.

முன்னணி சேனல்கள் அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியது. சிறப்பு பேட்டி கண்டது. நல்ல திறமையோடும், எதிர்கால கனவுகளோடும் சினிமாவை உயிராக நேசித்துக் கொண்டு கோடம்பாக்கத்தின் தெருக்களில் உலாவிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் மனதில் இந்த காட்சிகள் எத்தனை வலியை உண்டாக்கி இருக்கும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

அடுத்த அதிர்ச்சியை அள்ளி வீசினார் பவர் ஸ்டார். ஷங்கரின் ஐ படத்திலும், பாலாவின் பரதேசி படத்திலும் அவர் நடிப்பதாக அறிவித்தார். இந்த இருவர் படத்திலும் ஒரு காட்சியில் தலைகாட்டினால் போதும் என்று லட்சம் திறமையாளர்கள் காத்திருக்க இந்த வாய்ப்பு பவர் ஸ்டாருக்கு போனது எப்படி என்பது இதுவரை புரியாத ஒன்று.

அடுத்த அதிர்ச்சியை அளித்தவர் காமெடி சந்தானம். கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் சந்தானத்துடன் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. சிலர் பவர் ஸ்டார்தான் தயாரிப்பாளர் என்றார்கள். சிலர் சந்தானத்துடன் பார்டனர் என்றார்கள். இப்போது கும்பகோணத்தில் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

எப்படியோ பணம் மட்டும் இருந்தால் சினிமாவில் எந்த இடத்தையும் பிடிக்கலாம் என்பதற்கு பவர் ஸ்டார் ஒரு நல்ல உதாரணம். திறமை மட்டும் இருந்தால் கோடம்பாக்கத்துக் டீக்கடையும், அங்கு கிடைக்கும் மசால் வடையும்தான் கடைசிவரை கிடைக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணாமாகியிருக்கிறது.

அஜீத், விஜய்க்குகூட பெயருக்கு முன்னால்தான் தல, இளையதளபதி என்ற பட்டங்களை போடுவார்கள். ஆனால் சீனிவாசன் என்பதையே மறந்து பவர்ஸ்டார் என்று மட்டுமே குறிப்பிடும் அளவிற்கு அவர் வளர்ந்ததற்கு மூன்று காரணங்கள்தான் உண்டு. அது 1.பணம், 2.பணம், 3.பணம்.

அண்ணாச்சி தன் பலசரக்கு கடையில் ஒரு பையனை வேலைக்கு சேர்ப்பதற்குகூட அவனது பின்ணியை தெரிந்து கொண்டுதான் சேர்த்துக் கொள்வார். ஆனால் ஒரு அக்குபன்ஞ்சர் டாக்டரால் எப்படி கோடிக் கணக்கான பணத்துடன் விளையாட முடிகிறது என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சினிமா அவரை கிண்டல் என்கிற பெயரில் கொண்டாட ஆரம்பித்தது. அவரும் அந்த நெகட்டிவ் பப்ளிசிட்டியை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு சினிமா உலகத்தையே கேலி செய்துவிட்டார்.

சினிமா ஒரு கடல் அதில் யார் வேண்டுமானாலும் குதித்து, குளித்து விளையாடலாம், யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் அப்படி குதித்தவரோடு சினிமாவில் மதிப்பு மிக்கவர்களும் உடன் விளையாடினார்களே அது ஏன் என்பதுதான் சராசரி ரசிகனின் கேள்வி.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் காலம் ஒரு நாள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லத்தானே செய்யும். என்னதான் வேஷம் போட்டாலும் அது ஒரு நாள் கலையத்தானே செய்யும். அது இப்போது ஆரம்பித்திருக்கிறது. அக்குபன்ஞ்சர் சீனிவாசனுக்கு பணம் எப்படி வந்தது, எந்த வழியில் வந்தது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அதை இனி காவல் துறை சொல்லும். குறைந்த வட்டிக்கு கடன் தருகிறேன்.

அட்வான்ஸ் கொடுங்கள் என்ற தொழிலில் 60 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சீனிவாசன். இன்னும் அவர் மீது பல வழக்குகள் பாயலாம். வழக்கில் அவர் தண்டனை பெறலாம். அல்லது நிரபராதி என்று விடுதலையாகலாம்.

ஆனால் ஹீரோக்கள் நிறைந்த சினிமாவில் இரண்டு ஆண்டுகள் வெளிச்சத்துடன் வலம் வந்த சீனிவாசன் நிஜ ஹீரோவாகி ஒட்டுமொத்த சினிமாவையும் காமெடியாக்கி விட்டார் என்பதுதான் உண்மை.

1 comments:

Kolipaiyan said...

Nice

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...