சேரனின் பாசப்போராட்டம் வெல்லுமா?



டைரக்டர் சேரன் மகள் தாமினியின் காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சூளைமேட்டை சேர்ந்த சினிமா டான்சர் சந்துருவுடன் தாமினிக்கு ஏற்பட்ட காதலை ஆரம்பத்தில் சேரன் ஆதரித்தார். 

பின்னர் சந்துருவின் நடத்தை சரியில்லை என்று கூறி காதலக்கு சேரன் தடை போட்டார். இதனால் தாமினி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தனது தந்தை சேரன் மீது புகார் அளித்ததுடன் பரபரப்பான குற்றச்சாட்டுகளையும் கூறினார். 

காதலன் சந்துருவை கொலை செய்ய எனது தந்தை ரவுடிகளை ஏவி விடுகிறார் என்றும் தாமினி கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேரன் போலீசில் அளித்த புகாரில், ‘‘தனது மகள் தாமினி, காதலன் சந்துருவின் நடத்தை சரியில்லை என்று கூறி அவனை பிரிந்து விட்டதாகவும், பின்னர் தாமினியின் மனதை மாற்றி எனக்கு எதிராக சந்துருவின் குடும்பத்தினர் திருப்பி விட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சேரன் மீதும், சந்துரு மீதும் தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணியில் இருந்து இரவு 12 மணி வரை தாமினி மற்றும் அவரது காதலன் சந்துரு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது தாமினி சந்த்ருவை எந்த சூழ்நிலையிலும் நான் பிரிய மாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் அவரை போலீசார் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். சந்துரு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் காத்துக் கிடந்த சேரன் மற்றும் அவரது திரையுலக நண்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

இந்த காதல் விவகாரத்தில் சேரன் தரப்பில் எடுத்து வைக்கப்படும் வாதங்கள் நியாயமானவையாகவே உள்ளன. ஒரு தந்தையாக, தனது மகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

பெற்று வளர்த்து ஆளாக்கிய மகள் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை என்று எந்த தந்தையும் நினைக்க மாட்டார். அப்படி ஒரு தந்தையாக கடந்த 3 நாட்களாக சேரன் பாசப் போராட்டத்தையே நடத்தி வருகிறார். மயிலாப்பூரில் காப்பகத்தில் இருக்கும் தாமினியிடம் இன்று 2–வது முறையாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து இருந்தனர். 

அப்போது மீண்டும் அவருக்கு கவுன்சிலிங் அளிக்க திட்டமிடப்பட்டது. இதற்கிடையே சந்துரு குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து சந்துரு கவுன்சிலிங்குக்கு வர வில்லை. சேரன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவரும் வர வில்லை. அவரை எதிர்பார்த்து நடிகர் சந்திரசேகர், பொற்காலம் பட தயாரிப்பாளர் ஞானவேல் ஆகியோர் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் திரும்பி சென்று விட்டனர். இதனால் இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்தானது. 

காதலன் சந்துருவிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. அப்போது இந்த காதல் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும். அதே நேரத்தில் தனது மகள் தாமினி மனம் மாறி நம்மிடம் திரும்பி வந்துவிட மாட்டாளா? என்கிற ஏக்கத்துடன் கண்ணீரும் கம்பலையுமாக சேரன் காத்துக் கிடக்கிறார். 

மகளின் காதல் விவகாரம் தொடர்பாக 2 முறை பேட்டி அளித்துள்ள அவர் துக்கம் தாங்காமல் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சேரனின் பாசப் போராட்டம் வெல்லுமா? அவரது கண்ணீருக்கு விடை கிடைக்குமா? முடிவு... மகள் தாமினியின் கையில்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...